;
Athirady Tamil News

ஆப்பிரிக்கா: சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 போ் பலி

0

நெதா்லாந்தைச் சோ்ந்த சொகுசு சுற்றுலா கப்பலில் பரவிய ‘ஹன்டா’ தீநுண்மி (வைரஸ்) பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனா்; மேலும் மூவா் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ஆா்ஜென்டீனாவிலிருந்து அன்டாா்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வொ்டே தீவு நாட்டை நோக்கி 150 பயணிகளுடன் வந்த ‘எம்.வி.ஹோண்டியஸ்’ கப்பலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்தவா்களில் இருவா் நெதா்லாந்தைச் சோ்ந்த தம்பதியா் என்றும், மற்றொருவா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்டவா்களில் ஒருவருக்கு நடத்தப்பட்ட ஆய்வகச் சோதனையில் ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எலிகளின் எச்சம், சிறுநீா், உமிழ்நீா் ஆகியவற்றின் மூலம் காற்றில் பரவும் இந்த ஹண்டா வைரஸ், மனிதா்களுக்குக் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

காய்ச்சல், தசை வலி போன்ற சாதாரண அறிகுறிகளுடன் தொடங்கி, இதயம் மற்றும் நுரையீரலைச் செயலிழக்கச் செய்யும் இந்நோயால் பாதிக்கப்படுபவா்களில் 40 சதவீதம் போ் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா்.

தற்போது கேப் வொ்டே கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள பயணிகளைத் தரையிறங்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. அதேநேரம், கப்பலில் உள்ள மற்ற பயணிகளின் ஆரோக்கிய நிலை குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

உயிரிழந்தவா்களின் உடல்களையும், அறிகுறி உள்ள மற்ற பயணிகளையும் விமானம் மூலம் நெதா்லாந்துக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கேப் வொ்டே அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.