;
Athirady Tamil News

கனடாவில் முதன்முறையாக ‘ஹண்டாவைரஸ்’ தொற்று உறுதி!

0

கனடாவில் முதன்முறையாக, ‘எம்.வி ஹோண்டியஸ்’ (MV Hondius) சொகுசு கப்பலில் பரவிய வைரஸ் தொற்றோடு தொடர்புடைய நபர் ஒருவருக்கு ‘ஹண்டாவைரஸ்’ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டாட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்த சொகுசு கப்பலைச் சேர்ந்த நான்கு பயணிகளில் ஒருவருக்கு, கடந்த வியாழக்கிழமை வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் தொற்று இருக்கலாம் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து, இறுதி முடிவை உறுதி செய்வதற்காக அவரது மாதிரிகள் வின்னிபெக்கில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தற்போது வெளிவந்துள்ள சோதனை முடிவுகளின்படி, அவருக்கு ஹண்டாவைரஸின் வீரியமிக்க வடிவமான ‘ஆன்டிஸ் ஸ்டிரெய்ன்’ (Andes strain) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவருடன் பயணித்த மற்றொரு நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கனடா பொது சுகாதார நிறுவனம் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, வேறு எவருக்கும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை.

இந்தத் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள உயர் ஆபத்துக் குழுவைச் சேர்ந்த (High-risk contacts) அனைவரும் தீவிரமாக தனிமைப்படுத்தப்பட்டு, உள்ளூர் பொது சுகாதார அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களிடையே பரவக்கூடிய ஆபத்து கொண்ட இந்த ஆன்டிஸ் ரக ஹண்டாவைரஸ் பரவலைத் தடுக்கவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும் சுகாதார அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.