பலரின் கண்ணீருக்கு மத்தியில் தம்பதியின் இறுதிச்சடங்கு
டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் இறுதிச்சடங்குகள் இன்று (24) மக்களின் கண்ணீரஞ்சலியுடன் தரவளை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவ பகுதியில் பதுங்கியிருந்தபோது பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (23) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர், தனது மனைவியின் சகோதரரின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் பிடிபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன், அவரையும் அவரது மனைவியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.