;
Athirady Tamil News

தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை: டிரம்ப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு!

0

புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததற்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களுடன் பேசுகையில், ஈரானுக்கு எதிரானத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகள் புதிதாகத் தாக்குதல்களை நடத்துவதைத் தள்ளி வைக்குமாறு தன்னிடம் கேட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டியதைப் பொறுத்து இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோல, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக முற்றிலுமாகத் திறப்பதையும், அணுசக்தி தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு முடிவுக்குக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இதற்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும். டிரம்ப் கூறியிருப்பது ஒரு புதிய பொய் மட்டுமே. அதைத் தவிர வேறொன்றுமில்லை. ஈரான் ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில், எந்தவொரு தாக்குதல் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கியது முதல் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கப்பல்கள் அவ்வழியே கடந்துசெல்லும் முன்பு ஈரானிடம் அனுமதி பெற்று போக்குவரத்துக் கட்டணங்களை செலுத்தவேண்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.