;
Athirady Tamil News

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமலையே காணிகளை விடுவிப்போம் – யாழில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

0
வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார். 
காணி விடுவிப்புக்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மிகவும் தீவிரமான அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.
 படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்

‘காணிகளை விடுவிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, முப்படைகளின் தளபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு நேரடியாகக் களப்பயணம் மேற்கொண்டோம்.

இதன்போது பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கோரும் குறிப்பிட்ட சில காணிகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய முக்கியத்துவங்கள் குறித்து நேரில் ஆராயப்பட்டது.
 இந்தத் தகவல்கள் மற்றும் கள ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, ஜனாதிபதி தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபையிலும், நாடாளுமன்றப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்படும்.
தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எவ்வாறாயினும், சில அதிமுக்கியமான பகுதிகளில் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.
சில குறிப்பிட்ட காணிகளை விடுவிப்பதானது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது.
எனவே, அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், துறைசார் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளை உள்ளடக்கிய விசேட உயர்மட்டக் கூட்டமொன்று மிக விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.