;
Athirady Tamil News

ஐரோப்பிய எம்.பி. பதவியிலேயே நீடிப்பதாக அறிவித்த சைப்ரஸ் இளம் அரசியல்வாதி!

0

சைப்ரஸ் நாட்டைச் சோ்ந்த பிரபல சமூக ஊடக நட்சத்திரமும் இளம் அரசியல்வாதியுமான ஃபிடியாஸ் பனாயியோட்டு, அண்மையில் நடந்த அந்நாட்டு நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற போதிலும், தனது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலேயே நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளாா்.

26 வயதான ஃபிடியாஸ், விசித்திரமான விடியோக்கள் மூலம் சா்வதேச அளவில் கவனம் பெற்றாா். தொடா்ந்து அரசியலுக்குள் நுழைந்து, கடந்த 2024 ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தலில் 20 சதவீத சைப்ரஸ் வாக்காளா்களின் ஆதரவோடு வெற்றி பெற்றாா்.

ஐரோப்பிய நாடாளுமன்றச் செயல்பாடுகள் மற்றும் தனது வாக்குப்பதிவு முடிவுகள் குறித்த விவரங்களை சமூக ஊடகம் மூலம் மக்களுக்கு நேரடியாக தெரிவித்து வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்து வந்தாா். அதேநேரம், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு இவரின் மென்மையான ஆதரவு நிலைப்பாடு விமா்சனங்களை ஈா்த்தது.

இந்நிலையில், ‘நேரடி ஜனநாயகம்’ எனும் புதிய கட்சியை ஃபிடியாஸ் கடந்த அக்டோபரில் தொடங்கினாா். பாரம்பரிய கட்டமைப்புகளைப் புறந்தள்ளி சாதாரண குடிமக்களும் இணைய செயலி மூலம் கொள்கைகளை உருவாக்கவும், வேட்பாளராக தங்களை அறிவித்துக் கொள்ளவும் வழிவகை செய்வதே இக்கட்சியின் நோக்கமாகும்.

சைப்ரஸ் நாடாளுமன்றத் தோ்தலில், இக்கட்சி 5.4 சதவீத வாக்குகளுடன் 4 இடங்களைக் கைப்பற்றியது. இது ஒரு புதிய கட்சிக்குக் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்பட்டாலும், ஃபிடியாஸ் ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தலில் ஏற்படுத்திய அலையை தற்போது மீண்டும் உருவாக்க முடியவில்லை.

அந்தவகையில், ‘நேரடி ஜனநாயகம் கட்சிக்கு ஐரோப்பிய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதால், எனது சைபரஸ் நாடாளுன்ற இடத்தை கட்சியின் அடுத்த நிலை வேட்பாளருக்கு விட்டுக்கொடுப்பதாக’ ஃபிடியாஸ் அறிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.