;
Athirady Tamil News

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

0

குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது.

ஈரானின் கெஷ்ம் தீவிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் ட்ரோன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 6) அதிகாலை 2.30 மணிக்குத் தாக்குல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் நாட்டிலுள்ள அலி அல் சலீம் விமானப் படைத் தளம் மற்றும் குவைத்திலுள்ள ஐந்தாம் கடற்படைத் தலைமையகம் ஆகிய அமெரிக்க தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, ஈரானிய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஈரான் புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பில் வந்த 4 எண்ணெய்க் கப்பல்கள், ஈரானிய கடற்படையின் தொடர் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் சட்டவிரோதமான முறையில் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயற்சி செய்தன.

இதனால், ஒரேயொரு எண்ணெய்க் கப்பலைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதும், மற்ற கப்பல்கள் திரும்பிச் சென்றன. இந்த மோதலைத் தொடர்ந்து கெஷ்ம் தீவின் தகவல் தொடர்பு கோபுரங்களை அமெரிக்க ட்ரோன்கள் தாக்கியுள்ளன.

பதிலடியாக, அலி அல் சலீம் விமானப் படைத்தளம் மற்றும் அமெரிக்க ஐந்தாம் கடற்படைத் தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குவைத்தின் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, ஈரான் படைகள் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படும் குவைத் விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.