;
Athirady Tamil News

700-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற மியான்மர் ராணுவம்!

0

மியான்மர் ராணுவம் கடந்த 6 மாதங்களில் 700-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மியான்மரில் தேர்தல் நடத்தப்படும் என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மர் ராணுவம் அறிவித்திருந்தது. அன்று முதல், வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் குறைந்தபட்சம் 702 பேர் வரை கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக ஐ.நா. வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், “கொல்லப்பட்டவர்களில் 224 பெண்கள் மற்ற்ம் 153 குழந்தைகளும் அடங்குவர். இத்தகைய அழிவுக்கும் துயரத்திற்கும் ஜெட் போர் விமானங்கள், டிரோன்கள் போன்ற வான்வழித் தாக்குதல்கள் முக்கிய காரணமாகத் தொடர்கின்றன” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதிலளித்த ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி, ”702 பேர் கொல்லப்பட்டதற்கு மியான்மர் ராணுவமே பொறுப்பு. இதனால், மற்ற ஆயுதக் குழுக்களால் மக்கள் பலியாகவில்லை என்று அர்த்தமில்லை. இந்தக் கணக்குகள் எங்களுக்குக் கிடைத்த நம்பத்தகுந்த தரவுகள் மட்டுமே. இது முழுமையான புள்ளிவிவரம் அல்ல” என்று தெரிவித்தார்.

மியான்மரில் 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்ததால் உள்நாட்டுப் போர் மூண்டது. அங்கு நடைபெற்ற 10 ஆண்டுகால ஜனநாயக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்மூலம், ஆங் சான் கூசியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது.

அதன் பின்னர், 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. பின்னர், ராணுவ ஆட்சிக்குழுவின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ராணுவத்தின் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் எளிதாக வெற்றிபெற்றன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் மின் ஆங் லாயிங்-ஐ அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். ராணுவ ஆட்சியை தலைமையேற்று நடத்திய அவரே அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

ஐ.நா. உரிமைகள் அலுவலகம் மியான்மரில் தேர்தலை ஆரம்பம் முதலே விமர்சித்து வந்தது. அவர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “மியான்மரில் நிலவும் பாதுகாப்பின்மை, உறுதியற்ற நிலைக்கு மத்தியில், இராணுவக் கட்டுப்பாட்டில் நடைபெற்ற தேர்தல்களுக்கு முன்னதாக கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தேர்தல் நம்பகத்தன்மைக்குத் தேவையான அத்தியாவசிய அடிப்படை உரிமைகள், சுதந்திரத்தை மீறும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தப்பட்டன” எனத் தெரிவித்துள்ளது.

மியான்மர் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்து அவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், ஜெட் எரிபொருள் போன்றவற்றை வழங்குவதை உலக நாடுகள் நிறுத்தவேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.