இந்தியர்கள் சென்ற வணிகக் கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்!
ஓமன் கடற்பகுதியில் இந்தியர்கள் சென்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நடத்தப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஓமன் கடற்பகுதியில் ஜி.எஃப்.எஸ். என்ற வணிகக் கப்பல் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கப்பலில் 11 இந்தியர்கள் இருந்த நிலையில், 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு இந்தியரைக் காணவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.
ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், ஒமன் அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்த நடவடிக்கையில் ஆதரவு தந்துள்ள ஓமன் அதிகாரிகளுக்கு நன்றி.
இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் வருத்தமளிக்கிறது. பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் திரும்பும் வகையில், பதற்றங்களைத் தணிக்கவும், பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் நாங்கள் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்.
இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மற்றும் மக்கள் வசிப்பிடங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவேண்டும். மேலும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, இங்கு சர்வதேச நீர்வழிப்பாதை வழியே தடையற்ற மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் மேற்கொள்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.