;
Athirady Tamil News

பிரான்சில் அதி தீவிர எச்சரிக்கையின் கீழ் 22 மில்லியன் மக்கள்

0

பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

24 நிர்வாகப் பிரிவுகள்
இந்த வார இறுதியில் பிரான்சில், ஈபிள் கோபுரம் மற்றும் பாரிஸின் பிற முக்கிய இடங்கள் முன்கூட்டியே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், 22.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டின் இருபத்து நான்கு நிர்வாகப் பிரிவுகள், ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்ட உச்சகட்ட எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டன.

அதிக வெப்பநிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈபிள் கோபுரம் பிற்பகல் 4 மணிக்கே மூடப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் 70 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 1,083 அடி உயரமுள்ள ஈபிள் கோபுரம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பருவக்காலங்களில் வழக்கமாக நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும்.

பிரெஞ்சுத் தலைநகரின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் இரண்டான லூவ்ர் (Louvre) மற்றும் மியூஸே டி ஓர்சே (Musée d’Orsay) ஆகியவை இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

உலகில் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான லூவர், வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை வரை மூடப்படும் என்று வியாழக்கிழமை அறிவித்தது.

இதனிடையே, கடுமையான வெப்பம் காரணமாக, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் புதன்கிழமை வரை மியூஸே டி’ஓர்சே (Musée d’Orsay) அருங்காட்சியகம் முன்னதாகவே மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தீவிர வெப்பம் காரணமாக, ‘டூர் டி பிரான்ஸ்’ (Tour de France) மிதிவண்டிப் பந்தயத்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 185.5 கி.மீ தூரப் பிரிவில், மலைப்பாங்கான ஒரு பகுதிப் பாதையை நீக்கி 30 கி.மீ தூரம் குறைக்கப்படுவதாகப் பந்தய ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்; இப்போட்டியின் வரலாற்றிலேயே இத்தகைய முடிவு எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மனித நடவடிக்கைகளால்
பிரான்ஸ் முழுவதும் உள்ள பல நகரங்கள், வறண்ட வானிலையால் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், ஜூலை 14 அன்று கொண்டாடப்படும் தேசிய விடுமுறை நாளான ‘பாஸ்டில் தின’ (Bastille Day) வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன.

இதனிடையே, பத்து காட்டுத்தீச் சம்பவங்களில் ஒன்பது மனித நடவடிக்கைகளால் ஏற்படுபவை என்று எச்சரித்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஒரு நொடி கவனக்குறைவு கூட குடும்பங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம், நம்மைப் பாதுகாப்பவர்களை ஆபத்துக்குள்ளாக்கலாம் மற்றும் நமது கிராமப்புறச் சூழலை அழிக்கலாம் என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூன் மாதத்தில் நிலவிய வெப்ப அலையின்போது 2,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்களும், மே மாத இறுதியில் நிலவிய அதிக வெப்பத்தின்போது 300 மரணங்களும் பிரான்ஸில் பதிவாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.