நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக ஏ.ஜி. முபாறக் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அவர்களின் உத்தரவிற்கமைவாக, நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் I) ஏ.ஜி. முபாறக் நேற்று (15) நிந்தவூர் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது புதிய செயலாளருக்கு பிரதேச சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் வாழ்த்துகளும் வரவேற்பும் அளிக்கப்பட்டன.
தன் கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய செயலாளர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களுடன் விசேட அறிமுக அமர்விலும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன் போது, சபையின் தற்போதைய நிர்வாகச் செயற்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இக்கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட புதிய செயலாளர் திரு. ஏ.ஜி. முபாறக், பொதுமக்களுக்கு திறன் மிக்க, வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுமிக்க சேவையினை தங்குதடையின்றி வழங்குவதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களுக்குள் ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பலமாக வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
