;
Athirady Tamil News

இனவாதத்தைக் கடந்த மனிதநேயப் பண்பாளர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

0

அறிவும் நிர்வாகத் திறனும் இணைந்தால் அரசாங்க நிறுவனங்களும் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும் என்பதை அவர் தனது செயற்பாடுகளால் நிரூபித்து வருகிறார்.

இலங்கை அரசியலில் கொள்கை உறுதி, நேர்மை, திறமை மற்றும் மக்கள் நலனில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் தலைவர்களில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளார். அரசியல் என்பது அதிகாரத்தையும் ஆடம்பரத்தையும் அனுபவிப்பதற்கான கருவி அல்லாது மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு என்பதற்கு வாழும் உதாரணமாக அவர் திகழ்கிறார்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறைக்கு தேர்வாகி சுமார் ஒரு வருடம் மாத்திரமே அங்கு கற்றார். பின்னர் கட்சிப்பணிகள் மற்றும் தேவைகள் காரணமாக முழுநேர அரசியலைத் தேர்ந்தெடுத்து இன்றுவரை தொடர்கிறார். தனது அறிவையும் ஆற்றலையும் தனிப்பட்ட செல்வாக்கிற்காக அல்லாது, நாட்டின் எதிர்காலத்திற்காக அர்ப்பணித்தார். இலங்கையை பல தசாப்தங்களாகப் பின்னுக்குத் தள்ளிய ஊழல், வீண்விரயம் மற்றும் இனவாத அரசியலுக்கு எதிராக அச்சமின்றி குரல் கொடுத்து, மக்கள் மையப்படுத்தப்பட்ட அரசியலை உறுதியாக முன்னெடுத்த தலைவராக அவர் மதிக்கப்படுகிறார்.

இன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக அவர் ஆற்றிவரும் பணிகள், திறமையான நிர்வாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கவும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே போன்ற மக்கள் வாழ்வுடன் நேரடியாகப் பிணைந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும், பயணிகளுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் நம்பகமான சேவையை வழங்கவும் அவர் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளிலும் அவரது தொலைநோக்குப் பார்வை வெளிப்படுகிறது. மக்கள் தேவைகளை மையமாகக் கொண்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்கள், நவீன நகர திட்டமிடல், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய சேவை மேம்பாடு ஆகியவற்றில் அவரது அமைச்சு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நோக்கி செயல்பட்டு வருகிறது. அறிவும் நிர்வாகத் திறனும் இணைந்தால் அரசாங்க நிறுவனங்களும் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும் என்பதை அவர் தனது செயற்பாடுகளால் நிரூபித்து வருகிறார்.

ஒரு சிறந்த அமைச்சர் என்பவர் அறிக்கை வெளியிடுபவராக அல்லாமல் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்குபவராக இருக்க வேண்டும். அந்த வகையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒரு செயல்வீரர். அலுவலகத்தில் அமர்ந்து உத்தரவிடும் நிர்வாகியாக அல்லாமல், களத்தில் இறங்கி மக்களின் கருத்துகளைக் கேட்டு, அதிகாரிகளுடன் இணைந்து தீர்வுகளை வழங்கும் செயற்பாட்டு தலைவராக அவர் திகழ்கிறார். அதனால்தான் இன்று அவரது அமைச்சின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

பாராளுமன்ற சபை முதல்வராகவும் அவர் வெளிப்படுத்தும் முதிர்ச்சியான தலைமைத்துவம் தனித்துவமானது. சபையின் கௌரவத்தையும் ஜனநாயக மரபுகளையும் பாதுகாத்து, ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் சமநிலையுடன் நடத்தும் அவரது நிதானம், அரசியல் முதிர்ச்சியின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அரசியல் பயணத்தின் மிகப் பெரிய பலம் அவரது மனிதநேயப் பார்வையாகும். தமிழ், சிங்களம், முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற வேறுபாடுகளைத் தாண்டி, அனைத்து மக்களும் சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் வாழும் இலங்கையையே அவர் தனது அரசியல் இலட்சியமாகக் கொண்டுள்ளார். குறுகிய இனவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காமல், தேசிய நல்லிணக்கத்திற்காகவும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருப்பது, அவரை மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது.

அதிகாரம் மனிதர்களை மாற்றும் என்பார்கள். ஆனால் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வாழ்க்கை அதற்கு நேர்மாறான ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. எளிமை, பணிவு, நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் மக்கள் மீதான அக்கறை ஆகிய பண்புகளை அவர் அதிகாரத்திலும் பாதுகாத்து வருகிறார். அதுவே அவரை சாதாரண அரசியல்வாதியாக அல்லாமல் மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக மாற்றியுள்ளது.

புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் இந்த வரலாற்றுப் பயணத்தில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் உறுதியான தார்மீக பலமாகவும், திறமையான நிர்வாகியாகவும், கொள்கை உறுதியுள்ள மக்கள் தலைவராகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தொடர்ந்து விளங்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறோம்.

எஸ். சினீஸ்கான்…

சமூக- அரசியல் செயற்பாட்டாளர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.