சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிதியுதவி
மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன் என்பவரின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிதியுதவியும் வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை 29 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், வேலையில்லா பட்டதாரியான டிலெக்ஸன், பகுதி நேர தச்சுத் தொழிலாளியாக பணியாற்றியபோது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்றது நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்திற்கு அண்மையில் என்பதனால், பள்ளி நிர்வாகத்தின் தலைவர் பாயில் ஹாஜியார் தலைமையில் ஆகஸ்ட் 1 ஆம் திகதி உயிரிழந்தவரின் இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. மேலும், கட்டாரில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த சுஜா தலைமையிலான Q Cargo நிறுவனத்தின் சார்பிலும் ரூ.1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளி செயலாளர் யசீர் அரபாத் (B.A), பள்ளிவாசல் இமாம் அல்-ஹாபிழ் மெளலவி முஸ்தகீம் பலாஹி, பள்ளி நிர்வாகிகள், இமாம்கள், Q Cargo நிறுவன பிரதிநிதிகள், சர்வமத செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த அப்பகுதியிலுள்ள இந்து ஆலய குரு, இன நல்லுறவு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் மனிதாபிமான செயற்பாடாக இதனைப் பாராட்டியதுடன், பள்ளி நிர்வாகத்தின் முன்மாதிரியான நடவடிக்கைக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார்.