இந்தியாவுக்கு வங்கதேசம் இன்னொரு பாகிஸ்தான்! – ஷேக் ஹசீனாவின் மகன் பேச்சு!
வங்கதேசம் இந்தியாவுக்கு மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுத்துள்ளது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜீத் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவை வங்கதேச அரசு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா காணொலி வாயிலாகப் பங்கேற்ற இணையவழி நிகழ்ச்சியில் அவரது மகன் சஜீப் வாஜீத் கலந்துகொண்டார்.
அப்போது, அவர் இந்தியாவுக்கு இன்னொரு பாகிஸ்தானாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்துடன், வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையைக் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பல்வேறு தகவல்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் அவையின் கணக்குப்படி 1,400 பேர் உயிரிழந்தனர். ஆனால், அரசு தரப்பில் பலி எண்ணிக்கை 800-க்கும் சற்று அதிகம் எனக் கூறப்பட்டது. கூடுதலாகக் குறிப்பிடப்படும் அந்த 600 பேர் யார்? அந்தப் பெயர்களை ஐக்கிய நாடுகள் அவை எங்கிருந்து பெற்றது?
எங்கள் கட்சி (அவாமி லீக்) ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது. எங்கள் வழக்கறிஞர்கள் ஐ.நா.வுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளனர். ஆனால், இன்றுவரை அவர்கள் எந்தப் பெயர்களையும் வெளியிடவில்லை.
இந்தியாவுக்கு மிகவும் கவலை அளிக்க வேண்டியது என்னவென்றால் வங்கதேசம் இந்தியாவின் கிழக்கு எல்லையில் மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுத்துள்ளது. இன்று உங்களின் (இந்தியா) கிழக்கு எல்லையில் மற்றொரு பாகிஸ்தான் உள்ளது.
வெளிநாட்டு உளவுத்துறைகள் வங்கதேசத்தில் வெளிப்படையாகச் செயல்படுகின்றன” எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பு குறித்து வங்கதேச முன்னாள் பிரதமரின் மகன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேசத்தின் சுதந்திரத்துக்கான போரில் களமிறங்கிய இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கு உதவியது குறிப்பிடத்தக்கது.