சுதந்திர நாள் கொண்டாடியதன் விளைவா? உள்நாட்டில் பாகிஸ்தானின் தாக்குதலில் 30 பேர் பலி!
பாகிஸ்தான் ராணுவம் பலூசிஸ்தானில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30-க்கும் அதிகமான உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் சுராப் மாவட்டத்தில், பாகிஸ்தானிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்பட 30-க்கும் அதிகமான உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குடியிருப்புப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
பலூசிஸ்தான் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் பலூச் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தானின் வளமிக்க மாகாணமான பலூசிஸ்தானின் மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. இதனால், பலூசிஸ்தானை தனிநாடாக அறிவிக்க வேண்டி ஆயுதப்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவித்து கடந்த ஆக. 11 ஆம் தேதி பலூசிஸ்தான் மக்கள் தங்களின் முதல் சுதந்திர நாளைக் கொண்டாடியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.