செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!
செய்யறிவு போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்யறிவு துறையின் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்த கருத்துக்கு, உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களான ஓபன் ஏஐ, எக்ஸ் ஏஐ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அயர்லாந்து பயணத்தின் போது செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாவது:
“செய்யறிவால் ஏற்படும் அபாயங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நாம் பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்கலாம், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், தேவையற்ற எதிர்மறையான கருத்துக்களை முன்வைக்கும் மற்றும் நடக்கவே வாய்ப்பில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசும் பல சக்திகள் உள்ளன என்று நான் கருதுகிறேன்.
செய்யறிவானது தீமையை விட அதிக நன்மைகளையே தரும். சீனாவைவிட செய்யறிவு துறையில் அமெரிக்காவே முன்னிலையில் உள்ளது. வெளிப்படையாகச் சொன்னால், செய்யறிவின் வளர்ச்சியைத் தற்போதைய நிலையிலேயே தக்கவைக்க விரும்புகிறேன். மட்டுப்படுத்த வேண்டிய தேவையில்லை.
ஏனெனில், செய்யறிவு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர்களாவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் அதிபர் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது அவர்கள் விவாதிக்கவிருக்கும் விஷயங்களில் செய்யறிவு குறித்த விவாதமும் இடம்பெற வாய்ப்புள்ளது.