;
Athirady Tamil News

ஈரானுக்காக அமெரிக்காவை உளவு பார்க்கும் சீனா?

0

அமெரிக்க நிலைகள் மீது சமீபத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் செயற்கைக் கோள் படங்களை சீன உளவு அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. மேலும், அதனை டிரம்ப் குறைத்து மதிப்பிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சீனா உளவு பார்த்தது பற்றி அமெரிக்க தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், “சீனா நம்மை உளவு பார்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆம் நீங்கள் சொல்வது சரிதான், நாங்களும் அவர்களை உளவு பார்த்து வருகிறோம். நாங்களும் அதைச் செய்கிறோம். அதையே அவர்களும் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் செப் 24 அன்று வெள்ளை மாளிகைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அமெரிக்கா – சீனா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 17 அன்று, அமெரிக்கப் படைகள் ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தில் தங்கியிருந்த நிலையில், அங்கு ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில், 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுபற்றி, அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இதில் சம்பந்தப்பட்ட சீன அமைப்புகளின் பெயர்களை அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தது.

அமெரிக்க அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது, செயற்கைக் கோள் படங்களைப் பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்களை சீன அதிகாரிகள் கேட்டதாகத் தெரிவித்தனர். மேலும், ஈரானுக்கு சீனா உளவு பார்த்ததை ஒப்புக்கொள்ளவும் மறுத்தனர்.

ஈரானுக்கு ஆயுதங்களை விற்கவேண்டாம் என சீனாவை டிரம்ப் எச்சரித்திருந்தார். மேலும், ஈரானுக்கு உதவியதாக சீனாவின் 3 செயற்கை கோள் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

ஈரானின் முக்கிய வர்த்தக நட்பு நாடான சீனா அதன் எண்ணைய் உற்பத்தியில் பெரும்பகுதியை வாங்குகிறது. அதேநேரம், அந்நாட்டிற்கு ஆதரவு வழங்கும் முக்கிய சக்தியாகவும் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.