பட்டிமன்றங்கள் பட்டிதொட்டியெல்லாம் பரவிட வழிசெய்தவர்!
தமிழ் இலக்கிய உலகுக்கும், பட்டிமன்ற மேடைகளுக்கும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த புகழ்பெற்ற தமிழறிஞர், பேராசிரியர், பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா தமது 90ஆவது வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 11 அன்று மறைந்தார். இச்செய்தி உலகெங்கிலும் வாழும் தமிழர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1936ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தில் சுந்தரம், பாக்கியம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சாலமன் பாப்பையா. வறுமையான குடும்பச் சூழலில் வளர்ந்த அவர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்தார். குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதிலும், தமிழ் மொழி மீது கொண்ட தீராத காதலால் மதுரை தியாகராயர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்றார்.
தனது ஆசிரியர் பணியை தொடங்கிய அவர், பின்னர் தான் பயின்ற மதுரை அமெரிக்கன் கல்லூரியிலேயே தமிழ்த் துறை பேராசிரியராகவும் தலைவராகவும் பணியாற்றினார். வகுப்பறைகளைத் தனது மேடையாக மாற்றி மாணவர்களுக்குத் தமிழ் ஆர்வத்தை விதைத்தார். ‘புறநானூறு புதிய வரிசை வகை’, ‘பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை’ மற்றும் ‘திருக்குறள் உரை’ உள்ளிட்ட முக்கிய நூல்களை எழுதித் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தார்.
குன்றக்குடி அடிகளாரின் வழிகாட்டுதலில் பட்டிமன்ற மேடைகளில் தடம் பதித்த சாலமன் பாப்பையா, அதுவரை அறிஞர்கள் மத்தியில் மட்டுமே இருந்த பட்டிமன்றங்களை எளிய மக்களுக்கான தளமாக மாற்றினார்.
கடினமான இலக்கியத் தலைப்புகளுக்குப் பதிலாக, குடும்பம் மற்றும் சமூகச் சூழல்களை மையமாகக் கொண்ட தலைப்புகளை அறிமுகப்படுத்தினார்.
அவரது நகைச்சுவை ததும்பும் பேச்சும், சாமானிய மக்களையும் கவரும் தீர்ப்பு வழங்கும் பாணியும், ஊடகங்கள் வழியாக அவரை ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் கொண்டு சேர்த்தது.
ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற பல திறமையான மேடைப் பேச்சாளர்களை உருவாக்கி பட்டிமன்றக் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்.
‘டூயட்’, ‘பாய்ஸ்’, மற்றும் ‘சிவாஜி’ போன்ற சில திரைப்படங்களிலும் தோன்றித் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசு ‘கலைமாமணி’ விருதும், இந்திய அரசு 2021ஆம் ஆண்டில் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கி கௌரவித்தன.
அவரது மறைவுக்குத் தமிழக அரசியல் தலைவர்களும், திரையுலகினரும், இலக்கியச் சான்றோர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த ஒரு மாபெரும் ஆளுமையை தமிழ் சமூகம் இழந்துவிட்டது என்று தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். வறுமையை வென்று, தன் திறமையால் தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த சாலமன் பாப்பையாவின் நினைவும், அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளும் காலத்தால் அழியாதவை.