;
Athirady Tamil News

ஆன்டிபயாடிக் மருந்துகள் மனிதர்களின் குடலை பாதிக்குமா? என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்? (கட்டுரை)

0

பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்றிலும் காணப்படுகின்றன. அவை மனிதர்களின் வயிற்றிலும் வளர்கின்றன.

அவற்றில் சில, மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பாலில் இருந்து தயிர் தயாரிக்கும் செயல்முறைக்கு பாக்டீரியா உதவுவது இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

நம் உடலில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன. அவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அவற்றில் அதிக எண்ணிக்கையினவை நமது குடலில் இருக்கின்றன. நமது குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவை சிறப்பான நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் செரிமான அமைப்பை பராமரிக்கவும் உதவுகின்றன. ஒருவரின் உடல்நிலை மோசமடைந்தால், ஆன்பயாடிக் மருந்துகளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்பது நமக்குத் தெரியும்.

ஆன்டிபயாடிக் மருந்துகள் கடந்த 80 ஆண்டுகளாக தொற்று நோய்களை வெற்றிகரமாக எதிர்த்து வருகின்றன. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் நோய்வாய்ப்படும் விகிதம் மற்றும் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இது மனிதர்களையும் விலங்குகளையும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் மருந்து. எனவே, ஆன்டிபயாடிக் மருந்துகள் நுண்ணுயிர்களை அழிப்பதால் அவை ஆண்டி மைக்ரோபியல் ஏஜெண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆனால், அதிகளவிலான ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்வதால், நம் உடலுக்கு நல்லதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

நமது குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆன்டிபயாடிக்குகள், குடல் நுண்ணுயிரிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

”ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால், மருத்துவர் அவருக்கு ஆன்டிபயாடிக்கை பரிந்துரைக்கிறார். ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நிலை காரணமாக அந்த ஒரு கோர்ஸ், உடலில் காணப்படும் நுண்ணுயிரிகளின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சுமார் ஒரு வருடத்திற்கு அவைகள் முற்றிலும் தாறுமாறாக செயல்படுகின்றன,” என்று அமெரிக்கன் சொஸைட்டி ஃபார் மைக்ரோபயாலஜியின் ஆம்பியோ ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

2000 இல் இருந்து 2015 வரையில் உலகளவில் ஆன்டிபயாடிக் பரிந்துரைகள் 65% அதிகரித்துள்ளதாக தேசிய அறிவியல் அகாடமிகளின் செயல்முறைகள் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

ஆன்டிபயாடிக்குகளை சார்ந்திருப்பதால் நமது ஆரோக்கியத்தின் மீது ஏற்படும் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்

ஆன்டிபயாடிக்குகளை சார்ந்திருப்பதால் நமது ஆரோக்கியத்தின் மீது ஏற்படும் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள். ஆன்டிபயாடிக் உட்கொள்வதால் இரண்டு பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது –

• இது நமது குடல் நுண்ணுயிரிகளை சேதப்படுத்துகிறது

• ஆண்டிபயாடிக் மீதான பாக்டீரியாவின் எதிர்ப்பு நிலை (antibiotic resistance) அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் ஆண்டிபயாடிக்குகள் மீதான எதிர்ப்பு நிலை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் சிகிச்சைகளில் பாதிப்பு ஏற்படுவதாக மெடிக்கல் நியூஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த மருந்துகள் மீதான எதிர்ப்பு நிலையின் அபாயங்களைக் கண்டறிந்து, அவற்றை மிக முக்கியமானவை, தீவிரமானவை அல்லது கவலைக்குரியவை என்று மூன்று வகைகளாக, நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC) பிரித்துள்ளது.

இதைத் தவிர ஆன்டிபயாடிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த சுகாதார ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆன்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வது உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன.

அமெரிக்காவில் ஆண்டிபயாடிக்குகள் மீதான எதிர்ப்பு நிலை அதிகரித்து வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த ஜான்வி சுக்லா மீதும் ஆன்டிபயாடிக்குகள் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தின. அவர் நீண்ட காலத்திற்கு உயர் டோஸ் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டுவந்தார்.

“இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எனது இரண்டு முழங்கால் மூட்டுகளும் மாற்றப்பட்டன. இது ஒரு பெரிய அறுவை சிகிச்சை. அதனால் நான் நீண்டகாலம் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆன்டிபயாடிக்குகளையும் சாப்பிட்டு வந்தேன்.

பத்து நாட்கள் வரை எல்லாம் சரியாக இருந்தது. அதன்பிறகு எனக்கு தாங்க முடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது. ஆபரேஷனின் வலியைக்கூட நான் மறந்துவிட்டேன்,” என்று அவர் கூறினார்,

“வயிற்று வலி என்னை மிகவும் தொந்தரவு செய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் இந்த வலி ஏன் ஏற்படுகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வயிற்றுப் பிடிப்பு மற்றும் தாங்க முடியாத வலி இருந்தது,” என்கிறார் அவர்.

அந்த வலிக்காக டாக்டரிடம் சென்றபோது, ​​ஆன்டிபயாடிக் மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டதால், தனது பிரச்சனை ஓரளவு குறைத்ததாக ஜான்வி சுக்லா கூறினார்.

“டோஸ் குறைத்த பிறகு, வயிற்று வலி குறைந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் சுமார் ஒரு மாதம் மிகவும் சிரமப்பட்டேன்,” என்றார் அவர்.

ஆன்டிபயாடிக்குகள் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படுகிறது

“வேறு வழி ஏதும் இல்லை என்ற நிலை வரும்போது மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படவேண்டும்,” என்று ஓய்வு பெற்ற காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் மருத்துவர் பி.கோஷ் கூறுகிறார்.

“ஆன்டிபயாடிக்குகள் இல்லாமல் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாத பல சூழ்நிலைகளும் உள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

பல வகையான குடல் பாக்டீரியாக்கள் எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது உடலுக்கு நல்லது என்ற தகவலையும் அவர் அளித்தார்.

“ஆன்டிபயாடிக்குகளின் ஒரு கோர்ஸ் கூட, அதன் மீதான எதிர்ப்பு நிலையை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. குடலில் உள்ள குடல் நுண்ணுயிரிகளின் இருப்பை அது பாதிக்கும்.

இதுமட்டுமின்றி ஆன்டிபயாடிக்குகள் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மருந்துகள் மற்ற நல்ல பாக்டீரியாக்களையும் தாக்குகிறது,”என்றார் அவர்.

“உண்மையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆன்டிபயாடிக்குகள் குடலில் உள்ள எல்லா பாக்டீரியாக்களையும் பாதிக்கின்றன,” என்று மருத்துவர் கோஷ் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆய்வக மற்றும் மரபணு மருத்துவப் பேராசிரியர் கௌதம் டான்தாஸ், ஒரு காட்டை உதாரணம் காட்டி,”காட்டில் இருந்து ஒரு காய்ந்தபுல்லை அகற்ற கார்பெட் குண்டைப் பயன்படுத்துவது போன்றது இது.

இதில் நல்லது மற்றும் கெட்டது. என இரண்டுமே அழிக்கப்படுகின்றன. ஆண்டிபயாடிக்கும் அதுபோலவே செயல்படுகின்றன,” என்று சுட்டிக்காட்டினார்.

உண்மையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆன்டிபயாடிக்குகள் குடலில் உள்ள எல்லா பாக்டீரியாக்களையும் பாதிக்கின்றன

குடல் என்பது வாயிலிருந்து தொடங்கி ஆசனவாய் வரை செல்லும் நீண்ட குழாய். கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் மற்றும் பிற ஒட்டுண்ணிகள் இதில் வாழ்கின்றன. இது மைக்ரோபயோம் என்று அழைக்கப்படுகிறது.

குடல் மற்றும் மூளை இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. நமது மூளை முழு உடலுக்கும் செய்திகளை அனுப்புகிறது என்பதை நாம் அறிவோம். அதேபோல் குடலும் மூளையுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

குடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதன் நேரடி சமிக்ஞை மூளைக்குச் செல்கிறது. அதேபோல் மூளையில் சிக்கல் இருக்கும்போது அது குடலுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பும். மூளை மற்றும் குடல் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதே இதற்குக் காரணம் என்று ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

ஒருவருக்கு குடல் பிரச்சனை இருந்தால் இது போன்ற பல அறிகுறிகள் இருக்கக்கூடும்-

• ஒரு வேலையிலிருந்து மீண்டும் மீண்டும் கவனம் சிதறுவது.

• நினைவாற்றல் குறைவு

• பதற்றம்

•கவலை போன்றவை.

தோல் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்பு, ஒழுங்கற்ற ரத்த சர்க்கரை, வளர்சிதை மாற்றம் போன்றவையும் குடல் பிரச்சனைகளால் ஏற்படக்கூடும்.

“ஆன்டிபயாடிக்குகளை சார்ந்து இருக்காமல் இருப்பதே சிறந்தது. நம் உடலுக்கு நோய்களை குணப்படுத்தும் திறன் உள்ளது. உணவு மற்றும் பானங்கள் மூலம் நம் உடலின் சூழலியலை சரிசெய்ய முடியும்.

எனவே நமது ஆரம்பகால வாழ்க்கையில் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும்,” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆலோசனை அறுவை சிகிச்சை நிபுணர் ஜேம்ஸ் கின்ரோஸ் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.