;
Athirady Tamil News

தேர்தலில் அடைந்த வாக்கு வீழ்ச்சி

0

முருகானந்தம் தவம்

‘மாற்றங்களின் தலைவர்’ அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களாகி விட்டபோதும், நாட்டில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாத நிலையிலும் அவர்களின் ‘திசைகாட்டி’ தவறான திசை காட்டுவதனாலும்,

அனுரகுமார அரசுக்கான ஆதரவு பெரும் வீழ்ச்சியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதனை அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

கடந்த 2024 செப்டெம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி தலைவரான அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

கடந்த 2024 நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி 68,63,186 வாக்குகளைப்பெற்று 159 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

கடந்த 2025 மே மாதம் 6ஆம் திகதி நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜே.வி.பி. -தேசிய மக்கள் சக்தி தலைவரான அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

கடந்த 2024 நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப்பெற்று 159 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. கடந்த 2025 மே மாதம் 6ஆம் திகதி நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளையே பெற்றுக்கொண்டது.

அதாவது ஜனாதிபதித் தேர்தலில் 5,634,915 வாக்குகளை பெற்றுக் கொண்ட ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி அதன் பின்னரான பாராளுமன்றத் தேர்தலில் 1,228,271 வாக்குகளை அதிகமாகப் பெற்று 6,863,186 வாக்குகள் என்ற இமாலய வெற்றியைத் தனதாக்கியது.

இவ்வாறான வெற்றிகள் தந்த அசட்டுத் தைரியத்தினாலும் அபரிமிதமான நம்பிக்கையாலும் இதை விடவும் பெரு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் அரசு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்திய நிலையில்தான் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1,130,985 வாக்குகள் குறைவாகவும் பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 2,359,256 வாக்குகள் குறைவாகவும் பெற்று தமக்கான மக்களின் ஆதரவில் சில மாதங்களுக்குள்ளேயே பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் 4,363,035 வாக்குகளைப் பெற்ற நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் 1,968,716 வாக்குகளைப் பெற்றது.

இது ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் 2,394,319 வாக்குகள் குறைவாகும் அதேநேரம், நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 2,258,480 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 289,764 வாக்குகள் அதிகம்.

அதேபோன்றே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொதுஜன பெரமுன 342,781 வாக்குகளைப் பெற்ற நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் 350,420 வாக்குகளைப் பெற்றது.

இது ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 7,639 வாக்குகள் அதிகம். அதேவேளை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 954,517 வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் 604,097 வாக்குகள் அதிகம்.

இக்கட்சியினைப் போன்றே திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் 122,390 வாக்குகளைப் பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் 55,610 வாக்குகளை அதிகமாக்கி 178,006 வாக்குகளைப் பெற்றது.

தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 294,681 வாக்குகளை பெற்றுள்ளது. இது ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 172,285 வாக்குகள் அதிகம்.சர்வஜன அதிகாரம் கட்சி தனது வாக்கு வங்கியை நடந்து முடிந்த 3 தேர்தல்களிலும் அதிகரித்துள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகளுக்கான வாக்குகளும் இம்முறை பெருமளவில் அதிகரித்துள்ளன. பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழரசுக் கட்சி 257,813 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 307,657 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இது 49,844 வாக்குகள் அதிகம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தலில் 39,894 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 70,944 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இது 31,050 வாக்குகள் அதிகம்.ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் 65,382 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 89,177 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 23,795 வாக்குகள் அதிகம்.

அதேவேளை, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டு 2,299,767 வாக்குகளைப் பெற்றது.

பாராளுமன்றத் தேர்தலிலும் அதே பெயரில் போட்டியிட்ட நிலையில், 500,835 வாக்குகளைப் பெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியாக போட்டியிட்டு 66,234 வாக்குகளைப் பெற்றது. அதேபோன்று, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியாக தனித்துப் போட்டியிட்டு 488,406 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஆக நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அனுரகுமார அரசை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது வாக்கு வங்கியை அதிகரித்துள்ள நிலையில், ஆட்சியிலுள்ள ஜே.வி.பி.- தேசிய மக்கள் சக்தி மட்டும் தமது வாக்கு வங்கியில் பாரிய சரிவை, வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

இதனால்தான் அரசிலுள்ள சில வாய் வீச்சு விற்பன்னர்கள் தமது கட்சியின்
வாக்கு வீழ்ச்சிக்கு நொண்டிச் சாட்டுக்களையும் வேடிக்கையான கதைகளையும் கூறுகின்றனர்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப்பெற்ற வாக்குகள் தொடர்பில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க கூறுகையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் வாரத்தின் வேலை நாளில் நடைபெற்ற காரணத்தினாலேயே வாக்களிப்பு வீதம் குறைந்தது.

மேலும், சிங்கள தமிழ்ப் புத்தாண்டு காலம் மற்றும் வெசாக் பண்டிகை காலம் போன்ற காரணிகளும் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியில் தாக்கம் செலுத்தியது.எனவே, மக்கள் அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகக் கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என்கின்றார்.

இவரின் கூற்றுப்படி, அரச ஊழியர்கள் அனைவரும் ஆளும் ஜே .வி.பி. தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அவர்கள் வேலைக்குப் போனதால்தான்
கட்சிக்கான வாக்களிப்பு குறைந்தது.

அதேபோன்றே, சிங்கள தமிழ்ப் புத்தாண்டு காலம் மற்றும் வெசாக் பண்டிகை காலம் என்பவற்றையும் ஆளும் ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் தான் கொண்டாடியுள்ளனர். அதனால்தான் அவர்கள் வாக்களிக்கவில்லை என்றவாறாகவேயுள்ளது.

பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க கூறிய காரணங்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பதையும் அவ்வாறான காரணங்கள் இருந்தும் எதிர்க்கட்சிகள் கடந்த கால தேர்தல்களை விடவும் இந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பதனை இந்த ‘வாய் வீச்சு விற்பன்னர்கள்’ அறிந்தும் அறியாதவர்களாகவே பேசுகின்றனர்.

பிரதி அமைச்சர்தான் இவ்வாறென்றால் ஜே.வி.பி.- தேசிய மக்கள் சக்தி அரசின் பாராளுமன்ற சபை முதல்வராகவும் அமைச்சராகவுமுள்ள அடுத்த ‘வாய் வீச்சு விற்பன்னர்’ பிமல் ரத்னாயக்க ஒரு படி மேலே சென்று, “வடக்கில் நாங்கள் இல்லாமல் போயுள்ளோம் என்று கூறுகின்றனர்.

வன்னி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வாக்காளர்களுக்கு கசிப்பு விநியோகித்தது. பணமும் கொடுத்தது.பச்சையான இனவாதத்தை முன்னெடுத்தது. இதனை பொறுப்புடன் கூறுகின்றேன்” என பொறுப்பில்லாமல் குற்றம் சாட்டி விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்ற கதையைக் கூறுகின்றார்.

அதுமட்டுமன்றி, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைமையால் தாம் வெற்றி பெற்றிருந்தாலும், பல இடங்களில் ஆட்சியமைப்பதில் சிக்கல் இருப்பதால்தான் “தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ள உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகள் ஏதேனும் முறையில் ஆட்சியமைப்பார்களாக இருந்தால்

மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறான சபைகளுக்கு நிதி வழங்கப்படாது” என்று அமைச்சர்களும், ”உள்ளூராட்சி சபைகளில் கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு எதிராக சவால் விடுக்கும் வகையில் எவராவது செயற்படுவாராக இருந்தால் நாங்கள் பாராளுமன்ற மற்றும் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவோம்” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் எச்சரிக்கின்றனர்.

சர்வாதிகார ஆட்சிக்கு எதிரானவர்கள், மக்கள் விரோத ஆட்சியை மாற்றி அமைப்பவர்கள், ‘மாற்றம்’ ஏற்படுத்தப் போவார்கள், புதிய ‘திசைகாட்டி’கள் என்றெல்லாம் கூறி, ஆட்சிக்கு வந்த இந்த ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தியினர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அடைந்த வாக்கு வீழ்ச்சியை அடுத்தே சர்வாதிகார, மக்கள் விரோத ஆட்சியை முன்னெடுக்கத் தலைப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.