;
Athirady Tamil News

டெலோ இயக்க தலைவர் சிறீசபாரத்தினம் விடுதலைப் புலிகளால், சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் புலிகள் அமைப்பில் இருந்த வாசுதேவன் ஆற்றிய உரை.:

0

டெலோ இயக்க தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் புலிகள் அமைப்பில் இருந்த வாசுதேவன் ஆற்றிய உரை.:

மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண்ன் என்பது உலகை குருடாக்கிவிடும்.மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல.

நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய அசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது. மகாத்மா காந்தியவர்கள் கூறிய இன்னுமெரு வாசகம். 1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்!

பருத்தித்தித்துறை இராணுவ முகாமை தாக்க பல படையணிகளுடன் பயிற்சி பெற்ற நாம் திடீரென்று விடுதலைப் புலிகளின் யாழ் தளபதி கிட்டுவால் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறோம்.

நாம் ரெலோ மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்று கூறியவுடன் எமக்கு எதுவுமே புரியவில்லை. எமது போராளிகளை அவர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் அவர்களை மீட்க நாம் கல்வியங்காட்டை சுற்றிவளைக்கப் போகிறோம் என்ற விளக்கத்துடன் பாரிய சகோதரப் படுகொலைக்கான திட்டமிடல் தொடங்குகிறது. அதீத விசுவாசம் கொண்டவர்கள் தலைமை கூறியதை விட மோசமான மனிதவதைகளை செய்தனர்! தலைமைக்கு பணிந்தவர்கள் தலைமை கூறியதை அப்படியே செய்தார்கள்.

மனிதாபிமானமுள்ளவர்கள் விறைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள், தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள், தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.

தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்! நரபலி எடுத்துக் களைத்த அனைவரும் மீண்டும் முகாம் திருப்புகிறோம். மனச்சாட்சி உறுத்தியவர்கள் ஒரு சிலர் ஒளிவில் சிகரட் புகைக்க ஒதுங்கி பேசா மடந்தைகளாக அப்படியே மௌனத்து போனோம்! பயம் ஒரு புறம்! போராட்டம் சூன்யமாகி விட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம்! கொல்லப்பட்டவர்கள் எம்மவர்கள் என்ற மனச்சாட்சியின் உறுத்தல் ஒரு புறம்!

அன்று முதல் நாம் ஒரு நடைபிணமாகவே மாறி விட்டோம். ஆனால் அந்த வேதனை ஆறுவதற்கு முன்பே ஆயுதங்களை கட்டி தாக்குதலுக்கு தயாராகச் சொல்லி மீண்டும் ஒரு கட்டளை மே 6ம் திகதி அதிகாலை வருகிறது! தலையிடி காய்ச்சல் என்று சாக்கு கூறிய இரண்டு போராளிகள் தும்புக்கட்டையால் நையப்புடைக்கப்பட்டதை பார்த்ததும் எல்ப் ட்ரக்கில் முண்டியடித்தபடி கோழைகளாக அடுத்த கொலைக்களத்திற்கு புறப்பட்டோம்.

அன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை! ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு! இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும்! மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார். சில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது.

1987 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து பேச முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது! இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.

எல்லாம் முடிந்து விட்டது. ரெலோ இயக்கம் மக்களிடம் களவெடுத்த பொருட்கள் என்று பல கண்காட்சிகள் யாழ் நகரில் காட்டப்பட்டது. அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது கூட எனது நண்பர் கூறினார் ரெலொ களவெடுத்த படியால்தான் புலியள் அவையை அழிச்சவை என்று! பாவம் அந்த அப்பாவி மக்களிற்கு இன்றும் தெரியாது கண்காட்சியில் காட்டப்பட்ட பொருட்களில் முக்கால்வாசிக்க மேற்பட்ட பொருட்கள் எமது இயக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டவை என்று…

சரியாக 22 ஆண்டுகள் கழித்து 2009 மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று!
அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடி, சரணடைவு, நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லை, அவமானப்படவில்லை, ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை!

25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை. கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள். இன்று நானும் ஒரு துரோகி! காரணம் நான் பழசை கிளறுகிறேனாம்.

நாம் செய்வதெல்லாவற்றையும் கூட்டி அப்படியே மறைத்து விட வேண்டும்! அதை சும்மா கிளறுவதால் என்ன பயன்? செய்தவர்கள் இன்று இல்லை! ஆனால் உவன் மகிந்தனை விடக்கூடாது. இவர்கள் எல்லாம் இன்றும் மறக்கும் ஒரு விடயம் எவன் ஒருவன் தனது கடந்தகாலத்தை மறக்கிறானோ அவன் மீண்டும் அதையே செய்ய முயல்வான் என்பதே! < எம் தமிழ் தலைமைகள் எல்லாம் அன்று முதல் இன்று வரை தமது அதிகாரங்களை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார்களே ஒழிய மக்கள் நலன் மீது எந்த வித அக்கறையும் இருக்கவில்லை. இவ்வளவு அவலம் வந்து முடிந்த பின்னரும் ஒரு மீளாய்வுக்கு தயார் இல்லை! இன்று இந்த நிகழ்வு நடைபெறுவது கூட பலருக்கு தெரியாது. தெரிந்தாலும் அது பற்றி அக்கறையில்லை! இதுதான் எம் சமூகத்தின் சாபக்கேடு. தம் தவறுகளை திருத்த முயலாதவர்கள் எப்படி அடுத்தவனை திருந்தச்சொல்ல முடியும்?

You might also like

Leave A Reply

Your email address will not be published.