யாழில் வீடு புகுந்து தாக்குதல்! காவல்துறை தீவிர விசாரணை
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உள்ள வீடொன்றில் அடையாளம் தெரியாத இருவர் வீடு புகுந்து மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(3) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து நள்ளிரவு குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர் மிக மோசமான தாக்குதலை இவ்வாறு மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறை விசாரணை
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீதும் மோசமான தாக்குதலை மேற்கொண்டதால் அவர் உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் மகனை அழைத்து வருமாறு கூறி மிக மோசமான தாக்குதலை வீட்டின் உடமைகள் மீது மேற்கொண்டதுடன் அருகில் உள்ள வீட்டையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பஸ்தரால் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ள மருதங்கேணி காவல்துறையினர் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.