;
Athirady Tamil News

தொடர் அமளி எதிரொலி – பாராளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு…!!

0

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று காலை முதல், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் மற்றும் லக்கிம்பூரில் வாகனம் மோதி விவசாயிகள் உயிரிழப்பு சம்பவங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. அமளி காரணமாக அவை நடவடிக்கை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியபோது வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா உள்பட மூன்று சட்ட மசோதாக்களை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பவார் தாக்கல் செய்தார். 2019ம் ஆண்டு வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவில் சில திருத்தங்கள் மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட்டது.

திருத்தங்களுடன் கூடிய அந்த புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி நீடித்தது. எனினும் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. இதையடுத்து மக்களவை நடவடிக்கை திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபையை நடத்திய ராஜேந்திர அகர்வால் அறிவித்தார்.

மல்லிகார்ஜூன் கார்கே

முன்னதாக மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட், லக்கிம்பூர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு அவைத் தலைவர் இருக்கையை அவர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கை சுமூகமாக நடைபெற இரு தரப்பினரும் பேசி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, அவை நடவடிக்கையை திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் ஒவ்வொருவராக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அரசு சொல்கிறது. ஆனால் அவர்கள் அப்படி எதையும் செய்ய மாட்டார்கள். சஸ்பெண்ட் நடவடிக்கையை அவர்கள் திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுடன் நடத்திய சிறிய ஆலோசனைக்கு பிறகு நான் தெரிவித்தேன், ஆனால் ஆளும் கட்சியினர் அது குறித்து பேச தயாராக இல்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.