;
Athirady Tamil News

6 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது!!

0

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரை சிறையில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெப்ரவரி 19ஆம் திகதி அதிகாலை காரைநகர் கோவளம் கடற்பரப்பில் தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மார்ச் மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றையதினம்(04) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்கள் மன்றில் முற்படுத்தப்படாத நிலையில் மீனவர்கள் சார்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் குறித்த மீனவர்கள் கொரோனாத் தொற்று அச்சம் காரணமாக வாக்கு மூலம் பெறவில்லை எனவும் ஆகவே சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறும், அதுவரை 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவானிடம் தமது விண்ணப்பத்தை கோரியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதவான், மீனவர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதியளித்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேகநபர்களை மன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.