;
Athirady Tamil News

நயினாதீவு மருத்துவமனை பணியாளர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் தலையில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு!!

0

நயினாதீவு மருத்துவமனை பணியாளர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் தலையில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு- ஊரவர்கள் ஒன்றுகூடியதால் குழப்பம்

நயினாதீவு இறங்குதுறையில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச மருத்துவமனை பணியாளர்கள் மறுத்து வீடு திருப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார்.

அதனால் மருத்துவமனையில் கூடிய கிராமத்தவர்கள் நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் செல்வக்குமார் (வயது-42) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

நயினாதீவு இறங்குதுறையில் இன்று மாலை 6.30 மணிக்கு வந்தடைந்த பயணிகள் படகில் வந்திறங்கிய குடும்பத்தலைவர் நிலைதடுமாறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரை உடனடியாக நயினாதீவு பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அங்கிருந்த பணியாளர்கள் அனுமதிக்க மறுத்தனர். அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று சுத்தம் செய்துவிட்டு அழைத்து வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது அதிகளவு குருதி வெளியேறிய நிலையில் குடும்பத்தலைவர் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு அவரது சடலத்தைக் கொண்டு சென்ற ஊர் மக்கள் குடும்பத்தலைவரது உயிரிழப்பு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.