;
Athirady Tamil News

சிறையில் சக கைதியை கொலை செய்த 15 பேருக்கு தூக்கு – ஜார்கண்ட் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு..!!

0

ஜார்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜாம்ஷெட்பூரில் காகிதி மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினராக பிரிந்து அவர்கள் ஒருவர் மீது ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதில் மனோஜ் குமார் சிங் என்ற கைதி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மனோஜ் குமார் சிங் உயிரிழந்தார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை, குற்ற சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தது. இந்த வழக்கு மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ராஜேந்திர குமார் சின்கா நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் குற்றவாளிகள் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் இருவரையும் கைது செய்யும் பணிகளை போலீசார் முடுக்கி விட்டு உள்ளனர். சக கைதி கொல்லப்பட்ட வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஜார்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.