;
Athirady Tamil News

ராணி எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

0

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் இரண்டாம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதனிடையே, ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்தில் முகாமிட்டு உள்ளனர். இரண்டாம் எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெஸ்ட் மின்ட்ஸர் மாளிகையில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ராணியின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். இறுதிச்சடங்கை தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதால் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இன்று நடைபெற உள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கினை இங்கிலாந்து முழுவதும் சுமார் 125 திரையிரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ராணி எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.