;
Athirady Tamil News

இலங்கையை வந்தடைந்த சத்தூட்டப்பட்ட அரிசி கப்பல்கள்!!

0

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு செயற்திட்ட அறிக்கையொன்றின்படி, இலங்கை சனத்தொகையில் கிட்டத்தட்ட முப்பது சதவீதமானோர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முன்முயற்சிகள் மற்றும் புதிய நிதியிடல்கள் மற்றும் உணவு ஏற்றுமதிகள் ஊடாக இந்த தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்காவானது இலங்கை அரசாங்கம், WFP மற்றும் பிற பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவிசெய்வதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிதியளிப்புடனான 600 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட அரிசியினைக் கொண்ட முதலாவது தொகுதி கடந்த வாரம் இலங்கையை வந்தடைந்தது.

இந்த கப்பற்சரக்குகள், 3,950 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட அரிசி, 768 மெட்ரிக் தொன் சிவப்பு பருப்பு, 1,188 மெட்ரிக் தொன் சோயா மற்றும் திட்டமிடப்பட்ட 2,310 மெட்ரிக் தொன் சோளம் ஆகியவற்றை உள்ளடக்கிய USAID மற்றும் WFP ஆகியவற்றின் ஒரு பெரிய உணவு உதவி முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த உதவியானது 1.7 மில்லியன் பிள்ளைகள் மற்றும் 300,000 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பாடசாலை உணவு மற்றும் போசாக்கு குறைநிரப்பிகளை வழங்குவதற்கு உதவிசெய்யும்.

“அமெரிக்கா-இலங்கை உறவுகள் இந்த ஆண்டு 75 வருட நிறைவினைக் கொண்டாடுகின்றன, மற்றும் எங்களுடையது நட்பு மற்றும் பங்காண்மையின் கதையாகும்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் கூறினார். “குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் உட்பட பல இலங்கையர்களுக்கு போசாக்கான உணவிற்கான அணுகலை இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறைத்தபோது அமெரிக்க மக்கள் விரைவாக பதிலளித்தனர். இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்கான எங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த கப்பற்சரக்குகள் பிரதிபலிக்கின்றன.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு 270 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான புதிய உதவிகளை கடந்த வருடத்தில் அமெரிக்கா அறிவித்துள்ளது. “இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி பங்காளர்களில் ஒருவராக, அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்தினை நாளாந்தம் உட்கொள்வதானது இளைஞர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆகையினால்தான், ஆறு தசாப்தங்களுக்கு முன்பே இலங்கையில் USAID முதன்முதலில் மேற்கொண்ட உதவித் தலையீடுகளில் குழந்தை மற்றும் தாய்வழி உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களும் ஒன்றாகும்” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான USAID செயற்பணிப் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் தெரிவித்தார்.

“அதிக உணவுப் பாதுகாப்பற்ற சமூகங்களைச் சென்றடைவதற்காக WFP தனது அவசரகாலச் செயற்பாட்டை விரைவாக விரிவுபடுத்துவதைச் சாத்தியமாக்கிய USAID இன் உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என WFP இலங்கைப் பிரதிநிதியும் நாட்டிற்கான பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்தீக்கி கூறினார். “USAID இனால் நிதியளிக்கப்பட்ட சத்தூட்டப்பட்ட அரிசியின் சமீபத்திய தொகுதியானது, பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டத்தினை தொடர்வதற்கு உதவிசெய்யும் அதே வேளையில், குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தின் ஒரு கலவையின் ஊடாக மேலதிக ஊட்டச்சத்துக்களையும் வழங்கி, தமது குடும்பங்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கு போராடும் பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கிறது.” என அவர் மேலும் கூறினார்.

சக்தி, புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் ஒரு கலவையினை ‘உட்கொள்வதற்கு தயாரான’ ஒரு உணவாக தயாராகும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஒரு ஊட்டச்சத்து தலையீடான திரிபோஷாவை கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பெறுவார்கள். இந்த முன்முயற்சியானது அனைத்து இலங்கையர்களுக்குமான பொருளாதார செழிப்பு மற்றும் ஜனநாயக நல்லாட்சியினை மேம்படுத்துவதற்காக அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பங்காண்மையின் அங்கமொன்றாகும். USAID இன் பணிகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு, தயவுசெய்து usaid.gov/sri-lanka எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.