;
Athirady Tamil News

நியூசிலாந்தை தாக்கிய புயல்- 7 பேர் பலி!!

0

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிராந்தியங்களை கேப்ரியல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அங்குள்ள ஹாக்ஸ் பே, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களை இந்த புயல் பந்தாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் அங்குள்ள நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததை தொடர்ந்து, மக்கள் பலரும் வீட்டின் மேற்கூரைகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். இதனிடையே கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும்பாலான இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த கேப்ரியல் புயல் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.