;
Athirady Tamil News

சுவீடன், பின்லாந்து நேட்டோவில் இணைவதை துருக்கி அங்கீகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது: நேட்டோ தலைவர்!!

0

நேட்டோ அமைப்பில் இணைவதற்கான சுவீடன் மற்றும் பின்லாந்தின் முயற்சிகளை துருக்கி அங்கீரிக்கப்பதற்கான தருணம் வந்துவிட்டது என நேட்டோ தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார்.

துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்டோல்டென்பேர்க், துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மேவ்லுத் கவுசோக்குலுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

ரஷ்யாவின் எல்லையிலுள் பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் பல தசாப்தங்களாக இராணுவ அணி சேரா கொள்கையை கடைபிடித்து வந்தன.

ஆனால், உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைந்துகொள்ள அவ்விரு நாடுகளும் விண்ணப்பித்தன.

நேட்டோ அமைப்பில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு, தற்போதைய 30 அங்கத்துவ நாடுகளினதும் அங்கீகாரத்தை பெற வேண்டும்.

எனினும், சுவீடன், பின்லாந்தின் விண்ணப்பங்களுக்கு துருக்கியும் ஹங்கேரியும் மாத்திரம் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.

ஹங்கேரி எதிர்வரும் மார்ச் மாதம் இரு நாடுகளின் விண்ணப்பங்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியைப் பொருத்தவரை பின்லாந்தின் முயற்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், சுவீடனுக்கு அனுமதி வழங்க மறுத்து வருகிறது.

குர்திஷ் கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டில் தருக்கியில் நடந்த சதிப்புரட்சி முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவர்களை சுவீடனிலிருந்து நாடு கடத்துவதற்கு சுவீடன் அரசு மறுத்து வருவதால் சுவீடனின் நேட்டோ அங்கத்துவ முற்சிக்கு ஆதரவு வழங்க துருக்கி மறுத்துவருகிறது.

இந்நிலையில், சுவீடன், பின்லாந்து ஆகிய இரு நாடுகளின் விண்ணப்பங்களையும் துருக்கி அங்கீகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.