;
Athirady Tamil News

சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது!!

0

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 884 மி.கன அடி (9.8 டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது. குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10.1 டி.எம்.சி. இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது உள்ள தண்ணீரை வைத்து சென்னையில் கோடை காலத்திலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். ஏற்கனவே செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. குடிநீர் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனால் தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்படவில்லை. வரும் மாதங்களில் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா தண்ணீரை பெற முடியும். எனவே இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 2,524 மி.கன அடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளவு 1,081 மி.கனஅடி.

இதில் 831 மி.கன அடி தண்ணீர் உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. இதில் 2,962 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் முழு கொள்ளளவான 3,645 மி. கன அடியில் 3,067 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.