கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை பழிவாங்க காதலனின் மனைவியை திருமணம் செய்த தொழிலாளி!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2023/03/1844470-2.jpg)
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஹதியா கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ். இவரது மனைவி ரூபிதேவி. இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. அதாவது ரூபிக்கு பஸ்ராகா கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்ற தொழிலாளியுடன் கள்ளக்காதல் இருப்பது நீரஜ்க்கு தெரியவந்தது. ரூபி திருமணத்திற்கு முன் பஸ்ராகா கிராமத்தில் வசித்து வந்தார்.
அப்போது முகேசுடன் ஏற்பட்ட பழக்கத்தை திருமணத்திற்கு பின்பும் அவர் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. முகேசுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் ரூபிதேவியுடனான தொடர்பை கைவிடாத நிலையில் கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நீரஜ் பஸ்ராகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் கிராம பஞ்சாயத்து கூட்டத்திலும் அவர் முறையிட்டார்.
ஆனாலும் முகேஷ் ரூபியுடன் பழக்கத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து முகேஷ் ரூபியுடன் தனியாக வாழ்ந்து வந்ததை அறிந்த நீரஜ் கடும் ஆத்திரம் அடைந்தார். குறிப்பாக கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை பழி வாங்குவதற்காக அவர் திட்டம் தீட்டினார். அதன்படி முகேசின் மனைவியுடன் அவர் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். முகேசின் மனைவி பெயரும் ரூபி ஆகும். இந்நிலையில் நீரஜ், முகேசின் முதல் மனைவி ரூபி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
4 குழந்தைகளுக்கு தந்தையான நீரஜ் மனைவியால் கைவிடப்பட்ட நிலையில், மனைவியை பழிவாங்கும் வகையில் அவரது காதலனின் மனைவியை திருமணம் செய்தது அந்த கிராமத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இருவரது திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.