;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… துருக்கி, இமாச்சல் பிரதேசத்திலும் பூமி குலுங்கியது : அச்சத்தில் மக்கள்!!

0

ஆப்கானிஸ்தான் , இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து நடந்தன. இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் சுமார் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக பல நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே இருவேறு இடங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பைசாபாத்தில் இருந்து 173 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 4.1 ஆக பதிவானது.அதே போல் பைசாபாத்தில் இருந்து 188 கிமீ தொலைவில் அதிகாலை 4.16 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவானது. வீடு உள்ளிட்ட கட்டடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் அவசரஅவசரமாக வெளியேறினர்.இதனிடையே இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலா அருகே நேற்று இரவு 11.59 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.தர்மசாலாவில் இருந்து 52 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து துருக்கி நாட்டில் ஆப்ஸின் அருகே 23 கிமீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.