;
Athirady Tamil News

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டுவரவா இப்ராகிமின் மகனை அனுப்பினார்?

0

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவா இப்ராகிமின் மகனை அனுப்பினார் என்று கேட்கின்றோம் என்றும் இதனை யாரின் தேவைக்காக செய்தீர்கள் என்று இப்ராகிமிடம் அனுரகுமார கேட்கலாம் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற குற்றவியல் சட்டத் திருத்தங்கள் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “மிகவும் கோரமான குற்றச் செயலான ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெற்று நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. அது தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்டும். கத்தோலிக்க மக்களின் துன்பத்தை வைத்து அரசியல் செய்ய நான் இடமளிக்கப் போவதில்லை” என்றார்.

“ஏப்ரல் 21 ஆம் திகதி நீர்கொழும்பை சுற்றி வளைக்கவும் மக்கள் விடுதலை முன்னணியினர் திட்டமிட்டனர். இவர்கள் இப்ராகிமின் வீட்டுக்கு முன்னால் சென்றே போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். அவரே அவர்களின் தேசியப் பட்டியலில் இருந்தார். அவரின் மகன்களே தாக்குதலில் தொடர்புபட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதால் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இதனுடன் தொடர்புபட்டவர்கள் யார் என்பதனை அனுரகுமாரவிடம்தான் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

“கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவா இப்ராகிமின் மகனை அனுப்பினார் என்று கேட்கின்றோம். இதனை யாரின் தேவைக்காக செய்தீர்கள் என்று இப்ராகிமிடம் அனுரகுமார கேட்கலாம்.

அனுகுமார அன்று தாக்குதலின் போது கனடாவில் இருந்தார். நான் அமெரிக்காவில் இருந்தேன். ஆனால் நான் ஒருநாளில் வந்துவிட்டேன். ஆனால் அனுகுமார 5 நாட்களின் பின்னரே வந்தார்.

இதனால் ஜே.வி.பியினருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கதைக்க அருகதையில்லை. வேண்டுமென்றால் தாக்குதல் தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு நான் ஜே.வி.பியினரை அழைக்கின்றேன்”என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.