;
Athirady Tamil News

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்!!

0

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலம் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. சாமி கண் திறத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த திருநங்கைகள் தங்க நகைகளை அணிந்தும், கை நிறைய வளையல்கள் போட்டு கொண்டும் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து கோவில் அருகில் கற்பூரம் ஏற்றி விடிய, விடிய ஆயிரக்கணக்கான திருநங்கைகள் அரவாணின் பெருமைகளை பாடல்களாக பாடி கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்று (புதன்கிழமை) காலை 8 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.மணிக்கண்ணன் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேர் முக்கிய வீதி வழியாக சென்று தேவநாயக செட்டியார் பந்தலடியை அடைந்ததும் அரவாண்கள் பலியிடுவது நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தாலி கட்டிக் கொண்டுஇரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்ந்த திருநங்கைகள் தாலி அறுத்துநெற்றியில் வைத்திருந்த பொட்டுகளை அழித்து வளையல்களை உடைத்து அருகில் உள்ள குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்தில் வீட்டிற்கு திரும்பினார்கள்.

நாளை விடையாற்றியும், நாளை மறுநாள்( 5-ந் தேதி) தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ் தலைமையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.