கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு!!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இந்நிலையில், கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் 12 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 15 மணி நேரம் கடந்தும் சோதனை நடைபெற்று வருகிறது.