;
Athirady Tamil News

இதுதான் என் அரசியல் பாதை.. அ.தி.மு.க.வுக்கு அண்ணாமலை பதிலடி!!

0

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேசியது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, அதன் விளைவு, இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது. பாஜகவுடன் இனி கூட்டணியில் நீடிப்பது நல்லதல்ல என பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: Powered By VDO.AI இன்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எனக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன். அது மட்டும் அல்லாது நேற்று மற்றும் இன்று காலை, முன்னாள் தமிழக அமைச்சர்கள் சிலர் நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அவர்களைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை.

ஆனால் அவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சகோதர சகோதரிகளுக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாக உணர்கிறேன். தமிழகத்தில் ஊழல்தான் முக்கியப் பிரச்சினை. இத்தனை ஆண்டு காலம் ஒவ்வொரு குடிமக்களையும் சென்று சேர வேண்டிய நலத் திட்டங்கள், அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டு. இறுதியில் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்ததே இல்லை மக்களுக்கான நலத் திட்டங்களை இயற்றுவதை விட்டுவிட்டு, அதன் மூலம் சிலர் மட்டும் எவ்வாறு பயனடையலாம் என்ற நோக்கத்திலேயே திட்டங்கள் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இத்தனை ஆண்டுகளில், அடித்தட்டு மக்கள் தங்கள் நிலையிலிருந்து ஒரு படி முன்னேறியிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசமும் தேர்தலின்போது பணமும் கொடுத்தால் போதும், அடுத்த ஐந்து ஆண்டுகளும் இந்த மக்களைச் சூறையாடலாம் என்ற எண்ணத்திலேயே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். ஏழை எளிய மக்களை எப்போதும் கையேந்தி நிற்கும் நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். இந்த வகையான அரசியலை நான் வெறுக்கிறேன். தமிழகத்தில் நேர்மையான, மக்கள் நலனுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். அந்த ஒற்றை எண்ணத்துடன் எனது அரசியல் பயணம் தொடரும். கூட்டணி கட்சியையும் கூட்டணி தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான்.

தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதை கூறியிருக்கிறேன். ஆங்கில நாளேட்டுக்கு நான் கொடுத்திருந்த பேட்டியில் உண்மைக்கு புறம்பாக ஏதேனும் கூறியிருந்தேன் என்று யாராவது நினைத்தால், அந்த தவறை சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தினால், அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதேசமயம், கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது. இன்றைய தினம், தமிழக அரசு தலைமைச் செயலகத்தில், பதவியில் உள்ள அமைச்சர் ஒருவரின் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றிருக்கிறது. தமிழக அரசியலில் மலிந்திருக்கும் ஊழல், தமிழகத்திற்குக் கொண்டு வந்த மாபெரும் இழிவு, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலை இது. அடிமட்டம் வரை ஊழலில் ஊறிப்போய் இருக்கும் இந்த அரசியல் போக்கைத்தான் மாற்ற விரும்புகிறேன்.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற போக்கினால், அரசியல் மேல் தமிழக மக்கள் மக்கள் நம்பிக்கை இழந்து இருந்தனர். நேர்மையான அரசியலை, நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து வெகுகாலம் காத்துக் கொண்டிருந்த நம் மக்களுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி, அரசியல் மேல் நம்பிக்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறது. ஊழலற்ற அரசு சாத்தியம் என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது, தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலன் ஒன்றே சார்ந்த அரசு அமையும். அதை நோக்கியே எங்கள் அரசியல் பயணமும் தொடரும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.