;
Athirady Tamil News

தண்ணீரில் விஷம்: 6 மாணவிகள் பாதிப்பு!!

0

கனிஷ்ட கல்லூரி ஒன்றின் மாணவிகள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்ததால் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்களது தண்ணீர் போத்தல்களில் யாரோ ஒருவித விஷத்தை கலக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக நாரம்மல பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவிகளில் களைக்கொல்லியை நீரில் கலந்துள்ள மாணவியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்குரிய மாணவி, திங்கட்கிழமை காலை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வகுப்பறையில் தங்கி பல மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் களைக்கொல்லி மருந்தை கலக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தில் ஈடுபட்ட மாணவி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாணவியும் அதே பாடசாலையில் பத்தாம் ஆண்டு கல்வி கற்றுவருவதுடன், தனது நெருங்கிய நண்பர்கள் குழுவிற்கு சொந்தமான குடிநீர் போத்தலில் களைக்கொல்லி மருந்தை கலக்கியமை தெரியவந்துள்ளது.

களைக்கொல்லி தண்ணீர் குடித்து வாந்தி எடுத்த மாணவிகளை பார்த்து பயந்து தானும் அந்த தண்ணீரை குடித்ததாக கூறியுள்ளார்.

பாடசாலையின் மாணவர் தலைவி பதவிக்கான போட்டி நடைபெறுவதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீரில் கலந்துள்ள களைக்கொல்லி அதிக வலிமை இல்லாததால் மாணவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.