;
Athirady Tamil News

கடலில் நாட்டுப் படகு கவிழ்ந்து- தாய், 2 மகன்கள் மூழ்கினர்!!

0

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், நிஜாம் பட்டினம் அடுத்த ஏழை செட்டிலப்பாவை சேர்ந்தவர் சோம்பாபு. இவரது மனைவி சைவர்ணிகா. தம்பதியின் மகன்கள் தன்வீஷ்குமார் (வயது 8), தருனேஷ் (11 மாதம்). சோம்பாபு தனது குடும்பத்தினருடன் அடிக்கடி நிஜாம்பட்டினம் அருகே உள்ள அத்தாரிக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை தனது மனைவி மகன்களுடன் சோம்பாபு கடல் வழியாக படகில் சென்று கொண்டு இருந்தார்.

கடல் அலை வேகமாக வீசியது. இதனால் படகு தள்ளாடியது. எப்படியாவது கரைக்கு சென்று விட வேண்டும் என எண்ணி சோம்பாபு துடுப்பை வேகமாக செலுத்தினார். இருப்பினும் படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 4 பேரும் கடலில் விழுந்தனர். கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். சிறிது நேரத்தில் சைவர்ணிகா அவரது மகன்கள் தன்வீஷ் குமார், தருனேஷ் கடலில் மூழ்கினர். சோம்பாவுக்கு நீச்சல் தெரிந்ததால் கடலில் மூழ்காமல் காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டார்.

இதனைக் கண்ட அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சோம்பாபுவை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து கடற்படை வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் கடலில் மூழ்கியவர்களை தேடினர். நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று காலை முதல் கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.