;
Athirady Tamil News

வாக்னர் கூலிப்படையை உத்தியோகப்பூர்வமாக தடை விதித்தது பிரித்தானியா !!

0

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்பாக சுட்டிக்காட்டிய, பிரித்தானியா அதனை உத்தியோகப்பூர்வமாக தடை செய்துள்ளது.

செப்டம்பர் 6ம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் துரிதமாக முடிவெடுக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓகஸ்ட் மாதம் மேற்கு ரஷ்யாவில் விமான விபத்தில் அதன் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த பிறகு, வாக்னர் கூலிப்படையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே கருதப்பட்டது.

2014ல் வாக்னர் கூலிப்படையை யெவ்ஜெனி பிரிகோஜின் துவங்கினார். சட்ட ரீதியாக ரஷ்யாவில் கூலிப்படைகள் சட்டவிரோதமாக இருந்தாலும் 2022ல் தனியார் ராணுவப் படை என வாக்னர் கூலிப்படை பதிவு செய்துள்ளது.

பிரிகோஜின் ரஷ்யாவில் தொழிலதிபர் மட்டுமின்றி, குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர். வாக்னர் கூலிப்படை துவங்கப்பட்ட நாட்களில், சுமார் 5,000 பேர்கள் அதில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

ஆனால் 2022ல் ரஷ்ய சிறைக் கைதிகளை தமது குழுவில் இணைத்துக்கொண்டார் பிரிகோஜின், இதனால் 25,000 பேர்கள் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.

வாக்னர் கூலிப்படையானது சிரியா, மாலி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சூடான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஐரோப்பிய நாடுகள் பல வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.