;
Athirady Tamil News

துப்பட்டாவை பிடித்து இழுத்ததால் விழுந்த மாணவி பலி: 3 பேர் கைது!!

0

உத்தர பிரதேசத்தில் உள்ளது அம்பேத்கர் நகர் மாவட்டம். இரு தினங்களுக்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்வார் பகுதியில், ஹிராபூர் அங்காடி தெருவில் ஒரு 17-வயது பள்ளி மாணவியும், அவரது தோழியும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்த மாணவியை பின் தொடர்ந்து வந்து சீண்டலில் ஈடுபட்டு வந்தனர். அந்த இரு மாணவிகளும் அவர்களிடமிருந்து தப்பிக்க ஒதுங்கி சென்றாலும் அவர்கள் பலவந்தமாக தவறாக நடக்க முயன்றனர்.

இதில் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் அம்மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்தான். இதில் அந்த மாணவி நிலை தடுமாறி சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த வேறொரு இரு சக்கர வாகனம் அந்த மாணவியின் மீது மோதியது. இதில் அவர் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அத்துடன் அவரது தாடை பகுதி நொறுங்கியது. கீழே விழுந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் இந்த சம்பவத்தின் காட்சிகள் பதிவாகி, அவை சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. சம்பவத்திற்கு காரணமான இருவர் மற்றும் மாணவி மீது மோதிய வாகனத்தை ஓட்டி வந்தவர் ஆகிய 3 பேரையும் கேமிரா காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் காவல் அதிகாரிகளின் துப்பாக்கியை பிடுங்கி கொண்டு தப்பிக்க முயன்றதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். காயமடைந்த அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.