;
Athirady Tamil News

முல்லைத்தீவு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தொடருந்து திணைக்களம்

0

முல்லைத்தீவு மக்கள் மாங்குளம் தொடருந்து நிலையத்திற்கு மேலதிக வசதிகளை அமைத்து தருமாறு விடுத்திருந்த கோரிக்கையை தொடருந்து திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான தொடருந்து சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய பிரதான தொடருந்து நிலையமாக மாங்குளம் தொடருந்து நிலையம் காணப்படும் நிலையில் அங்கு ஆசன முற்பதிவு வசதிகள் இல்லாமையால் கடுகதி தொடருந்து நிறுத்தப்படாத ஒரு நிலை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள மக்கள் கிளிநொச்சி அல்லது வவுனியா தொடருந்து நிலையங்களுக்கே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆசன முற்பதிவு வசதி மற்றும் கடுகதி தொடருந்து நிறுத்தம் ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்குமாறு பவ்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில் நாளை மறுதினம் முதல் (21.10.2023) முதல் மாங்குளம் தொடருந்து நிலையத்தில் கடுகதி தொடருந்துகள் உட்பட்ட அனைத்து தொடருந்துகளும் நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேர அட்டவணைப்படி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் 05.10 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து 10.42 க்கு மாங்குளத்தை வந்தடையும் எனவும், யாழ் நிலா தொடருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் கொழும்பிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு அதிகாலை 4.20 க்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஞாயிறு தோறும் காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 க்கு புறப்படும் குளிரூட்டிய கடுகதி தொடருந்து மாங்குளத்திற்கு 14.54 ற்கு வந்தடையும் எனவும் காங்கேசன்துறையில் இருந்து இரவு 9.30 க்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு இரவு 11.20 க்கு வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக மக்கள் தொடருந்து திணைக்களத்துக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு விரைவில் ஆசன ஒதுக்கீட்டு வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.