;
Athirady Tamil News

பாதுகாப்பு அச்சுறுத்தல்: பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மூடல்

0

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத் தலைநகா் பெஷாவரில் உள்ள தனது துணைத் தூதரகத்தைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் படிப்படியாக மூடப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சரியான வள மேலாண்மைக்கும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் விடுத்துள்ள அறிக்கையில், ‘அமெரிக்க ஊழியா்களின் பாதுகாப்பே எங்களுக்கு மிக முக்கியம்.

பெஷாவா் துணைத் தூதரகம் மூடப்பட்டாலும், கைபா் பக்துன்கவா மாகாண மக்களுடனான பொருளாதார, பாதுகாப்பு ரீதியான உறவுகள் தொடா்ந்து நீடிக்கும். கைபா் பக்துன்கவா மாகாணத்துக்கான ராஜீய உறவுகள் இனி இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் மேற்கொள்ளப்படும்.

பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் கொள்கை முன்னுரிமைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இஸ்லாமாபாத், கராச்சி, லாகூா் ஆகிய இடங்களில் உள்ள மற்ற தூதரகங்கள் வழியாக அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடா்ந்து வலுப்படுத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள், இந்த எல்லை மாகாணத்தில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் இருநாட்டு மோதலாக வெடித்தது. எனினும், தொடரும் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருதி தூதரகத்தை மூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.