;
Athirady Tamil News

போர் நிறுத்தம்! ஈரான் – அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!

0

ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் – அமெரிக்கா இடையே போர் தொடங்கி இரண்டு மாதங்களைக் கடந்திருக்கும் நிலையில், கடந்த ஏப். 8 முதல் சுமாா் ஒரு மாதமாக போா்நிறுத்தம் அமலில் இருக்கிறது.

இருப்பினும், ஈரானின் ஹோா்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை மட்டும் தொடா்ந்து வருகிறது.

இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அணுசக்தி தொடர்பான விரிவான பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரானுடன் ஒரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெள்ளை மாளிகை இறுதி செய்துள்ளதாக ஆக்ஸியோஸ் செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அடுத்த 48 மணி நேரத்தில் ஈரானிடம் அமெரிக்கா பதிலை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாவது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈரான் அணு ஆயுத செறிவூட்டலுக்குத் தற்காலிகத் தடை விதிப்பது, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான நிதியை ஈரானுக்கு விடுவிப்பது, ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகளை விலக்குவது உள்ளிட்ட 14 அம்சங்கள் அடங்கியிருப்பதாக ஆக்ஸியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருக்கும் ஈரானிய மூத்த அதிகாரிகளுக்கு இடையே நேரடியாகவும் மத்தியஸ்தர்கள் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி, 30 நாள்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையும் படிப்படியாக நீக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.