;
Athirady Tamil News

யாழில் பிரமாண்டமாக உருவாகி வரும் பேய் வீடு

0

யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் முதல் தடவையாக யாழ்ப்பணத்தில், “Artistic Event Management” ஏற்பாட்டில் திகில் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் ஆனைப்பந்தி மெதடிஸ் மிஷன் வித்தியாலயத்திற்கு அருகிலையே இந்த திகில் வீடு உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வீட்டினுள் எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் செல்ல முடியும்.

ஒலி , ஒளி அமைப்புக்களுடன் மிக பிரமாண்டமாக இந்த வீடு உருவாகி வருகிறது. பேய் படங்களை பார்க்கும் போது ஏற்படும் திகில் அனுபவங்களை இந்த வீட்டினுள் சென்று திரும்பும் போது நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

வீட்டினுள் சுமார் 30 நிமிடங்கள் ஒவ்வொருவரும் செலவிட முடியும். அந்த 30 நிமிடங்களும் பல்வேறு வகையான திகிலான அனுபவங்களை உணர முடியும்.

ஒரு நாளைக்கு 800 பேர் வரையிலையே வீட்டுக்குள் அனுமதிக்க கூடிய நிலைமைகள் காணப்படுவதனால் , நுழைவு சீட்டுக்களை முற்பதிவு செய்து கொள்வது சிறந்தது.

நுழைவு சீட்டானது ஆளொருவருக்கு 750 ரூபாய் ஆகும். அதனை பெற்றுக்கொள்ள 0776016344 மற்றும் 0772018833 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளவும்.

அதேவேளை திகில் வீட்டுக்கு வெளியே உணவு திருவிழாவிற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அத்துடன் முகங்களில் படங்களை கீறி கொள்ளவும், செல்பி பூத்தில் படம் எடுத்து மகிழ கூடியவாறான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அவற்றுக்கான கட்டணங்கள் வேறானதாகும்.

இந்த திகில் வீட்டுக்கு 10 வயதுக்கு குறைவானவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள் , இருதய நோய் உள்ளவர்கள், வருவதை தவிர்த்து கொள்வது நல்லது. ஏனெனில் இது மிக பிரமாண்டமான முறையில் திகிலை ஏற்படுத்த கூடியவகையில் உருவாகி வருகின்றது என மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.