;
Athirady Tamil News

யாழில் மூதாட்டி கொலை:சந்தேகநபர்கள் மூவரின் மறியல் நீடிப்பு

0

யாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு பகுதியில் மூதாட்டி ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் (5)ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) எனும் மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

மேலதிக பரிசோதனை
அவரது உடற்கூற்று பரிசோதனையின் போது சந்தேகங்கள் இருந்தமையால் அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி காவல்துறையினர் 32 மற்றும் 28 வயதுடைய தம்பதியினரையும் , மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 19 வயது யுவதியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நீதவான் உத்தரவு
மூதாட்டியின் காணிக்குள் இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும் , ஒரு வீட்டினை தம்பதியினருக்கு வாடகைக்கு வழங்கி விட்டு மற்றைய வீட்டில் மூதாட்டி வசித்து வந்ததுடன், மூதாட்டியை பராமரிப்பதற்காக 19 வயது யுவதி ஒருவர் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக தங்கி இருந்தார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய போது, அவர்களை நேற்றைய தினம்(15) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.

அந்நிலையில் நேற்றைய தினம் மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.