;
Athirady Tamil News

கடலில் மிதந்து வந்த சடலம்: மீனவர்கள் அதிர்ச்சி

0

புத்தளம் – முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மிதந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுகடலில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சிலர், கடலுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து அதுபற்றி அந்த பகுதியிலுள்ள கிராம சேவகருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நீல நிற சேர்ட்டும், நீல நிற பாதணிகளும் அணிந்திருந்த நிலையில் காணப்பட்ட குறித்த சடலம் யாருடையது என்பது பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிரேத பரிசோதனை
அத்துடன், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் சடலத்தை பார்வையிட்டதுடன், இந்த சடலம் யாருடையது எனவும், இவரது உறவினர்கள் தொடர்பிலும் கண்டறியுமாறும், அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இனந்தெரியாத சடலம் தற்போது புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் தகவல் எதுவும் தெரிந்தால் அதுபற்றி புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரியின் 774144432 எனும் இலக்கத்திற்கோ அல்லது புத்தளம் பொலிஸ் நிலையத்தின் 032 2265223 எனும் இலக்கத்திற்கோ அறியத் தருமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.