;
Athirady Tamil News

முடிவுக்கு வந்தது 17 நாள் மீட்புப்பணி: சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு

0

17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்தில் இருந்து ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆனதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கைத்தட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

தொழிலாளர் குடும்பத்தினர் உணர்ச்சிபெருக்குடன் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டனரா என்பதையும், வெளியே வந்த தொழிலாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற ஆவலுடன் நலம் விசாரித்தபடியும் இருந்தார்கள். சுமார் 15 நாள்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்குப் பணியில் வெற்றி கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவும் 41 தொழிலாளர்கள் வெளியே பத்திரமாக திரும்ப வேண்டும் என்று செய்த பிரார்த்தனை நிறைவேறியிருக்கிறது. மோசமான வானிலை, சுரங்கத்தின் கடுமையான பாறை போன்ற சவால்களுக்கு மத்தியில் மீட்புக்குழு அவர்கள் அனைவரையும் மீட்டுள்ளது. உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.