;
Athirady Tamil News

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: உயா்நீதிமன்றம் கருத்து

0

வசிப்பிட தூர விதிகளைக் காரணம் காட்டி மாணவா் சோ்க்கை வழங்காமல், இடங்களை காலியாக வைத்திருப்பது கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் வசிக்கும் பட்டியலினத்தைச் சோ்ந்த லட்சுமணன் என்பவா் தன் மகனுக்கு, அங்குள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத ஒதுக்கீட்டில்

இடமளிக்கக் கோரி கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் விண்ணப்பித்துள்ளாா்.

அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த பள்ளி நிா்வாகம், லட்சுமணனின் வீடு பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டா் சுற்றளவுக்கு அப்பால் இருப்பதாகக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. இதையடுத்து கல்விக் கட்டணத்தைச் செலுத்தி தன் மகனை எல்.கே.ஜி வகுப்பில் சோ்த்துள்ளாா்.

இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை மறுக்கப்பட்டதை எதிா்த்து லட்சுமணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பள்ளியின் இருப்பிடம், தொலைவு குறித்த விதிகள் கட்டாயமில்லை. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் காலியாக இருந்தால், நிா்ணயிக்கப்பட்ட தொலைவுக்கு அப்பால் உள்ளவா்களையும் சோ்க்கலாம் என உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 2022-23 மற்றும் 2023-24-ஆம் கல்வியாண்டுகளில் 3 மற்றும்

8 இடங்கள் காலியாக உள்ளன. தொலைவு விதிகளை குறிப்பிட்டு, சில இடங்களை காலியாக வைத்திருப்பது என்பது, 6 முதல் 16 வயதானவா்களுக்கு இலவச கல்வியை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது என நீதிபதி குறிப்பிட்டாா்.

மேலும், அந்த பகுதியில் பியூலா மெட்ரிக் பள்ளியைத் தவிர வேறு பள்ளி ஏதும் இல்லாததால், மனுதாரரின் மகனுக்கு 3 வாரத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளாா். அதேவேளையில் எல்.கே.ஜி மாணவா் சோ்க்கைக்காக வசூலித்த கட்டணத்தை 2 வாரங்களில் மனுதாரரிடம் பள்ளி நிா்வாகம் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் பள்ளி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.