;
Athirady Tamil News

மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் வரை தொடரும்..! பொதுமக்களுக்கு அதிகரிக்கும் சுமை

0

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரக்கறிகளின் விலை ஏற்றம் ஏப்ரல் வரை நீடிக்கும் என்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மத்திய பொருளாதார காரியாலயத்தில் இன்று (18.01.2024) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த கரட்
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் கடந்த வருடம் இறுதியில் பெய்த கடும் மழை காரணமாக அதிகமான பிரதேசங்களில் ஏராளமான பயிர்கள் அழிவடைந்துள்ளது. இதன் காரணமாகவே நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறி வகையில் விலை அதிகரித்து காணப்படுகின்றது.

அத்துடன் நுவரெலியா பிரதேச விவசாயிகளிடம் இருந்து கடந்த ஓரிரு நாட்களாக கொள்வனவு செய்யப்பட்ட கரட் சரியான தரம் வாய்ந்ததாக இல்லை எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காரணம் தேவைக்கேற்ப கரட் இல்லாத காரணத்தால் அத்துடன் அதிக விலை காரணமாக விளைச்சலுக்கு உகந்த நிலையில் இல்லாத கரட்களையும் அறுவடை செய்யப்படுகின்றது.

சீரற்ற காலநிலை
கடந்த வருடங்களில் நுவரெலியா மத்திய பொருளாதரத்திலிருந்து ஏனைய வெளி மாவட்டங்களில் உள்ள பொருளாதார நிலையத்துக்கு நாளொன்றுக்கு 35 ஆயிரம் கிலோ கிராம் கரட் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஆனால் தற்போது குறைவடைந்து ஒரு நாளுக்கு ஐந்தாயிரம் ஆறு ஆயிரம் போன்ற அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதனால் மத்திய நிலையத்தில் தொழில் புரிந்த 200-க்கும் அதிகமானவர்கள் தற்போது தொழில் இழந்து நடுவீதியில் நிற்கின்றன.

இதுபோலவே ஏனைய மரக்கறி வகைகளும் சீரற்ற கால நிலை ஏற்பட்டு அழிவடைந்த காரணத்தால் அவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைகளுக்கே விற்பனை செய்யப்படுகின்றது அவைகளும் சிறந்த தரத்தில் இல்லை என்பதும் உண்மையான விடயம் என தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டில் வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த கரட்டின் விலை இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவையும் தாண்டி விற்பனை செய்யப்பட்ட கரட்டின் விலை இன்று 1இ000 ரூபாவாக குறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.